தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக விரோதம் : நல்லக்கண்ணு
சென்னை: தேர்தல் நடைபெறும் முன்பாகவே முதல்வர் வேட்பாளர் என முன்கூட்டியே அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கூறியுள்ளார். தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. அதை முன்னிறுத்தி தான் மக்கள் நல கூட்டணி உருவாகி உள்ளது என்றும் நல்லக்கண்ணு. தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா. திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் கருணாநிதியா? ஸ்டாலினா என்று மல்லுக்கட்டிய நிலையில் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஸ்டாலினே தெரிவித்து விட்டார். மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்தான் குழப்பம் நீடிக்கிறது.
வைகோவை முதல்வர் வேட்பாளராக்க மதிமுகவினர் விரும்புகின்றனர். ஊழல் கறை படியாத தலைவர் எனில் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் நான் இல்லை என்று வைகோ அறிவித்து விட்டார். அதேபோல முதல்வர் வேட்பாளர் என முன்கூட்டியே அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறியுள்ளார் நல்லக்கண்ணு.
கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் பஞ்சாலை தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த சின்னையன், வெங்கடாசலம், ரங்கண்ணன், இராமையன் ஆகியோரின் 70ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.நல்லகண்ணு மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.நல்லகண்ணு , ‘ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சி என்ற வேறுபாடு இல்லாமல் ஊழல்கள் மலிந்துள்ளன. மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகள் மூலம் இயற்கை வளம் மற்றும் நீராதாரம் சுரண்டப்பட்டுள்ளது.
தமிழகம் மழை வெள்ளத்தைக்கூட சமாளிக்க முடியாத நிலைக்கு நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று குற்றம்சாட்டினார். மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வு மற்றும் காலத்தின் தேவை கருதி அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணி உறுதியாக உள்ளது. முதல்வர் வேட்பாளர் என முன்கூட்டியே அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் தெரிவித்தார்.