ஹைட்ரோ கார்பன்.. நல்லாண்டார்கொல்லையில் 37 நாட்களுக்கு பிறகு போராட்டம் வாபஸ்
புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் 37 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிப்புத் தெரிவித்து நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லையில் 37 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் சென்று போராட்டக் குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனையடுத்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தனர். இதையடுத்து 22 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லை கிராமங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
வடகாட்டில் 19 வது நாளாக போராட்டம் தொடர்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விளைபொருட்கள், கருப்புக் கொடி ஏந்தி வந்த கிராம மக்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் 37வது நாட்களாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புதுக்கோட்டை சார் ஆட்சியர் அம்ரீத் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சார் ஆட்சியர் உறுதி அளித்ததைத் அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 37 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.