கொடைரோடு சுங்கச்சாவடி கண்ணாடி, தடுப்புகளை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது
சுங்கசாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கொடைரோடு சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் 40-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் தடுத்து நிறுத்திய போலீசாரையும் மீறி, சுங்கச்சாவடி மையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி மற்றும் தடுப்புகளை அடித்து நொறுக்கினர்.
சுங்கச்சாவடிகளின்றி, அனைத்து வாகனங்களும் கட்டணமில்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரையும் போலீசார் குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தது. இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.