சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு- திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சியினர் கைது
ஆட்சியரிடம் பேரணியாக சென்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை: சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க பேரணியாக செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியினர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வாகனங்கள் கடக்கின்றன. ஆனால் பசுமை விரைவு சாலை அமைத்தால் 66 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகும் என எண்ணியதால், சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டது.
இதனால் தூரமானது 274 கிலோ மீட்டராக குறைவதுடன் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் இந்த பயண தூரத்தை கடந்து விடலாம் என கூறப்பட்டது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அரூர் பகுதியில் முதல் கட்ட பணிகளாக பசுமை வழிச்சாலை செல்லும் பகுதியில் குறுக்கிடும் கிராமச்சாலை ஓரங்களில் கான்கிரீட்டால் அளவு கற்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் இந்த எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேர்ந்த விவசாயிகள், கற்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களும், வீடுகளும், அரசு பள்ளி கட்டிடங்களும் இடிக்கப்படும் சூழல் ஏற்படும் என அச்சம் தெரிவித்திருந்தனர். இதனால் பசுமை விரைவு சாலையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் கூட சேலத்தில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பியூஸ் மனுஷ் உள்ளிடோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர்.
அதன்படி, இன்றும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை ஆட்சியரிடம் முறையிட நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்தனர். அதற்காக ஒன்றுதிரண்ட அக்கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் பேரணியில் ஈடுபட முயன்ற அனைவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.