வகுப்பறையில் மது குடித்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6 மாணவர்கள் - வேறு பள்ளிகளில் சேர்ப்பு!
நாமக்கல்: நாமக்கல் அருகே பள்ளிக்கூடத்தில் மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக நீக்கப்பட்ட 6 மாணவர்களும், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 22ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 6 மாணவர்கள் வகுப்பறை ஒன்றில் அமர்ந்து மது அருந்தியது கண்டுபிடிக்கப் பட்டது.
மறுநாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகநாதன், குறிப்பிட்ட அந்த 6 மாணவர்களையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தங்களது தவறை அம்மாணவர்கள் ஒத்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அம்மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கினார் தலைமை ஆசிரியர்.
பொதுத்தேர்வுகள் அருகில் உள்ள நிலையில், இவ்வாறு பாதியில் பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டால் தங்களது எதிர்காலம் பாதிக்கும் என அம்மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேரச் சென்றுள்ளனர். ஆனால், அம்மாணவர்களை சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 6 மாணவர்களும் தங்களின் பெற்றோர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் பலமுறை சென்று, தாங்கள் செய்த தவறை மன்னித்து மீண்டும் தங்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர்கள் வற்புறுத்தியதை அடுத்து, மீண்டும் இந்த பிரச்னை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் தன்மை கல்வி அதிகாரி கோபிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த 6 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
முடிவில், தங்களது தவறை மன்னித்து விடுமாறு கோரியும், மீண்டும் தாங்கள் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அம்மாணவர்கள் கடிதங்கள் எழுதிக் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாணவர்கள் தற்போது பள்ளி இறுதியாண்டு படித்து வருகின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது எனவும், அவர்கள் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தவும் அவர்களை மாவட்டத்தில் உள்ள பெரியமணலி மற்றும் ஜேடர்பாளையம் அரசு ஆண்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.