விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலையால் பெரும் பரபரப்பு.. விசாரணை அவ்வளவுதான்?
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்துள்ளதால் வருமான வரித்துறை விசாரணை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆர்.கே. இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் தமிழகத்தில் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
ரூ.89 கோடி பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இச்சமயம் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அரசு ஒப்பந்த பணிகளை சுப்பிரமணியன் செய்து வந்தார். மேலும் விஜயபாஸ்கருக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையிலான பணப்பரிமாற்றங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான அரசு ஒப்பந்தங்கள் சுப்பிரமணியத்துக்கு கைமாறியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தன.
விஜயபாஸ்கரின் கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சுப்பிரமணியன் கவனித்து வந்ததாக கூறுப்படுகிறது. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களிலும் சுப்பிரமணியன் பின்புலமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய நேரத்தில் சுப்பிரமணியனுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை வளையத்தில் சிக்கினார். இந்த சூழலில் மோகனூரில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
விஜயபாஸ்கர் வருமான வரித்துறையின் கிடுக்கிடி விசாரணையில் உள்ளதால் இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த தற்கொலை விவகாரத்தால் விசாரணை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.