அப்பா இறந்துட்டா படிப்பை நிறுத்தணுமா… நாமக்கல் பெண் டாக்டராக நாமும் உதவலாமே!
திடீரென தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்ததால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி டாக்டர் படிப்பை தொடர முடியாமல் திணறி வருகிறார். அவருக்கு உதவும் மனம் உள்ளோர் உதவலாமே.. ஒரு டாக்டரை உருவாக்கலாமே…
நாமக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 2ம் இடத்தைப் பிடித்த மாணவி ஆர்த்தி மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
10ம் வகுப்புத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் 10 இடங்களைப் பிடித்த ஆர்த்திக்கு டாக்டர் ஆவதுதான் கனவு. இன்னும் சில ஆண்டுகளில் டாக்டராகப் போகும் இவருக்கு பெரும் சோதனை தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சட்டென வந்த மாரடைப்பு அவரது தந்தையை பலி கொண்டுவிட்டது. இதனால் படிப்பை தொடர முடியாமல் திணறி வருகிறார் ஆர்த்தி.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆர்த்திக்கு 6ம் வகுப்பில் இருந்து டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது கனவு. டாக்டராகி சமூகத்திற்கு உதவ வேண்டும் என்றும் எதிர்க்காலத்தில் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்திற்காகவே டாக்டர் படிப்பை தேர்ந்தேடுத்தார் ஆர்த்தி.
தந்தை திடீர் மரணம்
தந்தை இறந்ததால், டாக்டர் கனவை நிறைவேற்ற முடியாமல் கலங்கிப் போயுள்ளார் ஆர்த்தி. அவரது குடும்பத்தில் சகோதரர் ஒருவர் மட்டுமே ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவருக்கும் மாதம் வருமானம் வெறும் 5000 ரூபாய்தான்.
கல்விக் கட்டணம்
மருத்துவ படிப்பிற்கு ஓராண்டிற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற சூழலில் படிப்பை கைவிட ஆர்த்தி முடிவெடுத்துள்ளார். குடும்பச் சொத்தை விற்றுதான் மருத்துவ படிப்பிற்கான செலவை அவரது பெற்றோர் செய்து வந்துள்ள நிலையில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் ஆர்த்தி.
தனியார் கல்லூரி
10ம் வகுப்புத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 2வது இடத்தைப் பிடித்த ஆர்த்தி, 12ம் வகுப்பில் 1178 மார்க் எடுத்தார். ஆனாலும் போதிய அளவு கட் ஆப் மதிப்பெண் இல்லாததால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்விட்டது.
உதவி இல்லை
ஆர்த்தியின் தந்தை சந்திரமோகன் உற்றார் உறவினரிடம் இருந்து பெரிய அளவில் பணம் பெற்றே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். அவர் இறந்த பின்னர் உதவி செய்ய உறவினரும் முன் வரவில்லை என்கிறார் ஆர்த்தி.
பாதியில் படிப்பு
மருத்துவப் படிப்பிற்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும், மற்ற உறவினர்கள் மற்றும் சுற்றத்தார் ஏன் கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுத்துவிட வேண்டியதுதானே என்று கூறி வருவதாக ஆர்த்தி வருத்தப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் சகோதரனின் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியும் அவர்கள் தாயாரை வற்புறுத்தி வருவதாகவும் ஆர்த்தி கூறியுள்ளார்.
தொடர் துயரத்தால் டாக்டர் படிப்பை தொடர முடியாமல் இருக்கும் ஆர்த்திக்கு உதவுவோமே...