ஜெ. சொன்ன நாய் கதையை சொல்லி பாஜகவை வெறுப்பேற்றும் 'நமது எம்ஜிஆர்'
சென்னை: நமது எம்ஜிஆர் பத்திரிகையில், பாஜவை மீண்டும் விமர்சனம் செய்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது, டிடிவி தினகரன் தரப்புக்கும், பாஜக தரப்புக்குமான மோதல் தொடர்வதைத்தான் காட்டுகிறது.
நமது எம்ஜிஆர் நாளிதழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கூட பல நேரங்களில் இருட்டடிப்பு செய்கிறது. காரணம், அந்த பத்திரிகை இன்னும் டி.டிவி.தினகரன் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. நமது எம்ஜிஆர் பத்திரிகையில், தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியையும், அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்தும், கிண்டல் செய்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்களை நம்பி, மறைந்த ஜெயலலிதா எதிர்த்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது, ஆனால், மத்திய அரசு நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசுக்கு சாதகமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி கவிதை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இன்று வெளியான நமது எம்ஜிஆர் பத்திரிகையில், தாய் சொன்ன தத்துவ கதைகள் - அறிவு' என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியிலும், பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்து கட்டுரை வெளிவந்துள்ளது.
2004ம் ஆண்டு பிப்ரவரி 9ம்தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட துவக்க விழாவில், ஜெயலலிதா நிகழ்த்திய உரையில் இருந்து ஒரு பகுதி அதில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
வெள்ளப்பெருக்கு
ஓர் ஆற்றில் நிறைய வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. அங்கே ஓர் மனிதர் வந்தார். ஆற்றைக் கடக்க வேண்டும் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நின்று கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே பயந்த சுபாவதுள்ள மனிதர். எனவே அவர் எப்படி ஆற்றைக் கடந்து செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ஒரு வலிமையான காளைமாடு வந்து கரையில் நின்றது. கண நேரத்தில் அது ஆற்றுக்குள் குதித்து நீந்தத் தொடங்கியது. அப்போது கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் உடனே ஆற்றிலே குதித்தான். காளை மாட்டின் வாலை உறுதியாக பிடித்துக் கொண்டான்.
காளை கரை ஏறியது
காளைமாடும் விரைவாக நீந்தியது. வாலை பிடித்துக் கொண்டிருந்த அந்த சிறுவனும் அதன் பின்னாலேயே போனான். காளைமாடு கரை ஏறியது. அந்த சிறுவனும் கரை ஏறினான். `ஓ, இப்படிக் கூட ஆற்றை கடக்கலாமோ?'' என்று அந்த மனிதர் நினைத்தார். நமக்கு ஒரு காளைமாடு அகப்படாதா என்று தேடிப் பார்த்தார். அப்போது அந்த பக்கம் நாய் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. நாய் ஆற்றுக்குள் குதித்தது. இந்த மனிதரும் உடனே ஆற்றுக்குள் குதித்தார். குதித்து, நாயின் வாலை இறுகப் பிடித்துக் கொண்டார். நாய் தத்தளிக்கத் தொடங்கியது. அந்த மனிதரோ நாயின் வாலை விடவே இல்லை. எந்த சனியனோ தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பயந்து போன நாய் கடிக்கப் பார்த்தது. அந்த மனிதர் நாய் வாலை பிடித்து தொங்க தொடங்கினார். அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.
தப்பித்திருக்கும்
நடு ஆற்றுக்குள் வருகிறபோது நாய்க்கும் அந்த மனிதருக்கும் நடந்தது ஒரு ஜீவ மரணப் போராட்டம். ஒரு சில நொடிகள் தான், நாய் நீந்த முயற்சிக்க மனிதர் அதன் வாலைப் பிடித்து தொடங்க, நாயையும் அந்த மனிதரையும் சேர்த்து ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. நாய், தான் மட்டும் நீந்தியிருந்தால் ஒரு வேளை உயிர் பிழைத்திருக்கக் கூடும். பாவி மனிதர் அந்த நாயையும் நீந்த விடாமல் சாகடித்து விட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓப்பீடு
தற்போது அதிமுக மற்றும் பாஜ இடையே நடைபெற்று வரும் அரசியல் பிரச்னைகளை இப்படி நமது எம்ஜிஆர் பத்திாிகையில் ஜெயலலிதா, 2004ம் ஆண்டு கூறிய கதையை உதாரணத்துக்கு கூறி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். பாஜகவோடு கூட்டு வைத்தால் அதிமுக வெள்ளத்தில்தான் அடித்துச் செல்லப்படும் என்பதைத்தான் இவ்வாறு கூறுகிறதாம் நமது எம்ஜிஆர்.