3 பாஸ்கரன்.. 2 ராஜேந்திரன்.. ஆனா ஓட்டுப் போடும் போது குழப்பமே வராது பாஸ்!
திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டசபைத் தொகுதியில் பாஸ்கரன் என்ற பெயரில் 3 சுயேச்சைகளும், ராஜேந்திரன் என்ற பெயரில் 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 5 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓட்டுப் போடும்போது வாக்காளர்களுக்கு எந்தக் குழப்பமும் வராது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஒரே பெயரில் சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்து விடுவார்கள். இதுபோல நடப்பது சகஜம்தான். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பமாகி மாற்றி ஓட்டைப் போட்டு விடுவதும் உண்டு.
இந்த நிலையில் திருவள்ளுர் தொகுதியில் திமுக சார்பில் வி.ஜி.ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல சுயேட்சையாக டி.ராஜேந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மறுபக்கம், அதிமுக சார்பில் ஏ.பாஸ்கரன் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல் சுயேச்சையாக ஏ.பாஸ்கரன், இன்னொரு சுயேட்சை வேட்பாளர் என்.பாஸ்கரன் என மொத்தம் 3 பேர் அதே பெயரில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு பரிசீலனையின்போது அதிகாரிகளுக்கே சற்று குழப்பமாகி விட்டது. இருப்பினும் அனைத்து வேட்பு மனுக்களையும் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஒரே பெயரில் இத்தனை பேர் இருப்பதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள். தற்போது வேட்பாளரின் பெயருக்கு அருகே அவரது படமும் இடம் பெறும். எனவே வாக்காளர்களுக்கு நிச்சயம் குழப்பம் வராது என்று கூறினர்.