கரூர் அருகே அடக்கம் செய்யப்படுகிறது நம்மாழ்வாரின் உடல்
கரூர்: கரூர் அருகே வானகம் என்ற இடத்தில் இயற்கை வேளாண் வி்ஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
திருவையாறு அருகே உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார். 75 வயதான இவர் நேற்று மரணமடைந்தார். தனது வாழ்நாள் முழுவதும், இறுதிவரை அவர் மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும், இயற்கை விவசாயத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும் பாடுபட்டு வந்தவர். இதற்காக தான் பார்த்து வந்த அரசுப் பணியை இளம் வயதிலேயே உதறியவர்.
கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார்.
இந்த நிலையில், அதே வேளாண் பண்ணையிலேயே நம்மாழ்வாரின் உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது நம்மாழ்வாரின் உடல், தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் திரளானார் மறைந்த நம்மாழ்வாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.