நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் பழிவாங்கும் பாம்பாக நடித்துள்ளார் குஷ்பு.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாம்பு சீரியலான நந்தினியில் விஜயகுமார் குடும்பத்தை பழிவாங்கும் பாம்பாக நடித்துள்ளார் நடிகை குஷ்பு. பிசியான அரசியல் பணிகளுக்கு இடையே சீரியலில் பாம்பாக நடித்து ரசிகர்களை கவர வருகிறார் குஷ்பு.
தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளிலும் சன் நிறுவன சேனல்களே ஒளிபரப்புகின்றன. தமிழில் வெளியான மற்ற சீரியல்களை விட அதிகமான பட்ஜெட்டில் பாலிவுட் சீரியல்களுக்கு போட்டியாக எடுக்கப்பட்டு வருவதுதான், இந்த சீரியலின் ஹைலைட்.
விஜயகுமார், நித்யாராம், மாளவிகா, காயத்ரி ஜெயராம், சச்சு, சிங்கம்புலி, வையாபுரி என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். கதையின் நாயகி நந்தினியாக நடித்துள்ளார் நடிகை குஷ்பு.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு, சினிமாவையும் தாண்டி, சின்னத்திரையில் மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என பல சீரியலில் நடித்துள்ளார். அதேபோல், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும், ஜாக்பாட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சன்டிவியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இப்போது சன்டிவியில் நந்தினி பாம்பாக நடித்துள்ளார்.
நான்கு மொழிகளில் சீரியல்
சன் குழுமத்திற்காக நந்தினி என்ற மெகா தொடரை அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார் சுந்தர் சி. இந்த தொடரின் கிரியேட்டிவ் ஹெட் அவர்தான். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
பாம்பும் பேயும்
சமீபகாலமாக சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி நேயர்களை கவர்ந்து வருகிறது. ஒருபக்கம் பேயாக மாளவிகா நடிக்க, மற்றொரு பக்கம் பாம்பு பெண்ணாக நடிக்கிறார் நித்யாராம். கூடவே மந்திரவாதியாக நடிக்கிறார் காயத்ரி ஜெயராம்.
பழிவாங்கும் பாம்பு
விஜயகுமார் வீட்டின் புற்றில் உள்ள நந்தினி பாம்பு அவரது குடும்பத்தை பழிவாங்கத் துடிக்கிறது. இதற்கு தோதாக விஜயகுமார் வீட்டு மருமகள் கங்காவின் உடம்பிற்குள் புகுந்து கொள்கிறது பாம்பு. விஜயகுமார், நம்பூதிரி, அவரது நண்பர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நந்தினி பாம்புக்கு செய்த பாவம் என்ன என்பது பிளாஷ் பேக். பைத்தியமாக இருக்கும் பூசாரி வேறு அவ்வப்போது வந்து விஜயகுமாரை கொலை செய்ய துடிக்கிறார்.
ரத்தம் சொட்ட சொட்ட
குடும்பத்தில் யாராவது ஒருவரை கொன்றே ஆகவேண்டும் என்ற வேகத்தில் பாம்பு வீட்டிற்குள் வர அதைப் பார்த்து பாம்பை விரட்டிக்கொண்டு அனைவரும் செல்ல அதன் வாலில் அடித்து காயப்படுத்தி விடுகிறான் மாயாவின் அண்ணன். பாம்பின் வாலில் அடிபட ரத்தக் காயத்தோடு வீடெல்லாம் சுற்றி வர... பாம்பை குடும்பமே தேடுகிறது. அது கங்காவின் ரூமுக்குள் போனதாக சொல்ல அங்கே போய் தேடுகிறார்கள்.
வெளிப்பட்ட ரகசியம்
கங்கா பாம்பாக மாறுபதை மனநிலை சரியில்லாத மாயா பார்த்து விட, அவளை கொல்வதற்கு விரட்டிக்கொண்டு செல்கிறது. மாயா மாடிப்படியில் உருண்டு விழ நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாள்.
பாம்பாட்டி
வீட்டிற்குள் பாம்பு வந்த தகவல் விஜயகுமாருக்கு தெரியவர, பதறிப்போய் நம்பூதிரிக்கு சொல்கிறார். பாம்பாட்டியை கொண்டு வந்து பாம்பை பிடிக்கச் சொல்கிறார் நம்பூதிரி. பாம்பாட்டி மகுடி ஊதிய உடனே கங்காவிற்குள் மாற்றம் ஏற்பட அதைப்பார்த்த சச்சுவிற்கு சந்தேகம் எழுகிறது.
பழிவாங்குவாளா நந்தினி
நந்தினி பாம்பு கங்காவிற்குள்தான் இருக்கிறது என்பதை குடும்பத்தினர் கண்டு பிடித்து விடுவார்களா? பாம்பு ஏன் பழிவாங்கத் துடிக்கிறது என்பதை தனது மகனிடம் சொல்வாரா விஜயகுமார்? தனது அப்பாவை கொலை செய்ய வந்த பூசாரியை டிடெக்டிவ் மூலம் கண்டு பிடிக்க நினைக்கிறார் அருண். அந்த திட்டம் நிறைவேறியதா என பல கேள்விகளுக்கு விடை தருகிறாள் நந்தினி.