கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நாங்குநேரி எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
நெல்லை: நாங்குநேரி எம்.எல்.ஏ. நாராயணன் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு நடத்தினார்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கூந்தன்குளத்தில் தற்போது குளம் நிரம்பி, ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது. குளத்தின் உள்ளே உள்ள மரங்களில் பறவைகள் கூடு கட்டி முட்டையிட தொடங்கியுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நாராயணன் கூந்தன்குளத்துக்கு வந்து பறவைகள் சரணாலயத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள குளத்துக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தில் ஏறி பைனாக்குலர் மூலம் பறவைகளை பார்த்தார். பின்னர் அங்கு நின்றிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் குறைகளை கேட்டார். அதனைத் தொடர்ந்து சுற்றுலா மாளிகை, சிறுவர் பூங்கா பகுதிகளுக்கும் சென்று பார்த்தார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என பார்வையிட்டார். பின்னர் மூலைக்கரைப்பட்டியில் இருந்து கடம்பன்குளம், அரமநேரி வழியாக கூந்தன்குளம் வரும் சாலையையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டார். மருத்துவமனையில் டாக்டர்கள் சரிவர இருப்பதில்லை என பொது மக்களிடம் இருந்து வந்த புகாரையடுத்து அங்கு அவர் ஆய்வு செய்தார்.
எம்.எல்.ஏ.வின் இந்த திடீர் ஆய்வால் சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் ஆடி போய் உள்ளன.