கமலை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது.. நாஞ்சில் சம்பத் நறுக்
சினிமா வாய்ப்பு இல்லாததால் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்துவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை : மிகப்பெரிய கலைஞன் கமல்ஹாசன் தன்னுடைய இருப்பை காட்ட வேண்டி சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுக அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் டிடிவி. தினகரனை நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் எடப்பாடி அரசு மீதான ஊழல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றார்.
நடிகர் கமல்ஹாசன் அரசின் எல்லாத்துறைகளிலும் ஊழல் இருப்பதாகக் கூறுகிறார், சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் கமல்ஹாசன் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு மிகப்பெரிய கலைஞனுக்கு இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது என்னைப் பொறுத்தமட்டில் சோகமான விஷயம் தான், என்றார்.