ஈனச் செயலில் ஈடுபடும் தீபா.. 'நறநற' நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவால் கண்டு கொள்ளப்படாதவர் தீபா. அவர் ஏன் போயஸ் கார்டன் செல்ல வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: போயஸ் கார்டனுக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு நுழைய முயன்றார். இவருடன் அவரது கணவர் மாதவனும் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.
தீபா வருகை
இந்நிலையில், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடு தனக்கு தான் சொந்தம் என்று கூறி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு வந்தார்.
போலீசார் மறுப்பு
கார்டனுக்குள் தீபா நுழைய முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவரது உடன் வந்த தீபா ஆதரவாளர்களும் அனைவரும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைப்பற்றத் திட்டம்
இதுகுறித்து அதிமுக அம்மா கட்சி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் பொதுச் செயலாளராக இருந்த போதும் தீபாவை போயஸ் கார்டனில் அனுமதிக்க வில்லை. அண்ணன் மகள் என்ற உரிமையில் அந்த வீட்டை கைப்பற்ற தீபா திட்டமிடுகிறார்.
தீபாவின் தீமை
வேறு எந்த நோக்கமும் அவருக்கு இல்லை. தீபா குடியிருக்கும் வீடே ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது. தீபா இப்படி ஒரு தீமை செய்வார் என்பதை முன்கூட்டியே அறிந்தேன்.
நினைவு இல்லமாக…
ஜெயலலிதாவின் சொத்தை நினைவில்லமாக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டை முதல்வர் எடுக்க வேண்டும்.
உரிமை இல்லை
தீபாவிற்கு போயஸ் கார்டனில் நுழைய எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதாவால் கண்டு கொள்ளப்படாத ஒருவர் தீபா. அவரது திருமணத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை.
ஈனத்தனம்
ஜெயலலிதாவிற்கு விருப்பமில்லாதவர் தீபா. அவரது நடவடிக்கையும் ஈனத்தனமாகவே இருக்கிறது. தீபா எதற்காக இப்போது போயஸ் கார்டன் செல்ல வேண்டும்.
கபளீகரம்
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற வகையில் தினகரன் போயஸ் கார்டன் செல்லலாம். ஆனால் தீபா ஏன் செல்ல வேண்டும். வீட்டை கபளீகரம் செய்வது தீபாவின் திட்டம். அதற்கு அனுமதிக்க முடியாது. தீபா உள்ளே செல்ல அனுமதி மறுப்பது நியாயம்தான் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.