அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, கலைராஜன் நீக்கம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி!
கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி, புகழேந்தி உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை : அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் புகழேந்தி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோரை நீக்கி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினர் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்களை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வி.பி. கலைராஜன், பாப்புலர் முத்தையா, சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டாலும், அவர்களாகவே மாறி வந்துவிடுவார்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாகவும், ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.