ஜெ. மரணம் குறித்து மாதவனிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்தது ஏன்?: நாஞ்சில் சம்பத் கேள்வி
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் நம்பகத்தன்மை குறித்து நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தீபாவின் கணவர் மாதவனிடம் எதற்காக ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போதில் இருந்து அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகின்றன. அவரது மரணம் குறித்த உண்மைகளை விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை ஊடகங்கள் மூலமாக வெளியிட்டார். நாளை ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ வெளியானதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோ தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்டதாக அ.தி.மு.க.,வினரும், தினகரனிடம் அளிக்கப்பட்ட வீடியோ எப்படி வெற்றிவேலிடம் போனது என்று சசிகலாவின் குடும்பத்தினரும் தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் அணியின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் மீது நம்பகத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்தாமல் ஜெயலலிதாவிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத தீபாவின் கணவர் மாதவனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன ? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், திட்டமிட்டே விசாரணை கமிஷன் திசை திருப்பப்படுவதாகவும் அதற்கு பின்னால் இருப்பவர்களை இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டு உள்ளார்.