நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
சசிகலா, தினகரனின் தீவிர விசுவாசியான நாஞ்சில் சம்பத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை நேற்று இரவு பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
அத்துடன் நாஞ்சில் சம்பத் மீது பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் இன்று ஒரு மனு அளித்தனர். அதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூண்டுதல் பேரில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. ஆகையால் நாஞ்சில் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடியாத்தம் போலீசில் நாஞ்சில் சம்பத் மீது அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசி வருவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.