நாஞ்சில் சம்பத்தை தவிடுபொடியாக்கிய 'இரோம் ஷர்மிளாவின் 90 வாக்குகள்'
மணிப்பூர் தேர்தலில் இரோம் ஷர்மிளா 90 வாக்குகள் மட்டுமே வாங்கினார் என்ற செய்தி தம்மை தவிடுபொடியாக்கிவிட்டது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றதாக வெளியான தகவல் தம்மை தவிடுபொடியாக்கிவிட்டது என சசிகலா அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் எழுதியுள்ளதாவது:
தேர்தலில் வெற்றியும் ,தோல்வியும் மாறி மாறி வரும் வெற்றிகண்டு வெறியாட்டம் போடாமலும் தோல்வியைக் கண்டு துவளாமலும் இருப்பதுதான் அழகு என்று அண்ணா அன்று சொன்னதை இன்று நினைத்து பார்க்கிறேன்.
வெற்றியானாலும் தோல்வியானாலும் அது ஒரு சம்பவம் மட்டுமே...ஆனால் மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தி 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரோம் ஷர்மிளா நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்ற தகவல் என்னைத் தவிடுபொடியாக்கிவிட்டது.
உலகித்திலேயே அதிக நாள் உண்ணாவிரதம் இருந்த அவருக்கு மணிப்பூர் மக்கள் தந்த பரிசு இதுதானா?
தியாகம், அர்ப்பணிப்பு ,போராட்டம், சமூகசேவை இவைகளெல்லாம் அர்த்தமற்ற சடங்குகளா?
ஆரவார அரசியலில் இரோம் ஷர்மிளா காணாமல் போனது மிகுந்த கவலையை தருகிறது.
மணிப்பூர் மக்கள் அவரை வீழ்த்தியதன் மூலம் அவர்களே வீழ்ந்து விட்டார்கள் என்பதை வருங்காலம் சொல்லும்.
விரக்தியிலும்,வேதனையிலும் சிக்கித்தவிக்கின்ற இரோம் ஷர்மிளா விரைந்து அந்த துன்பத்தில் இருந்து விடுபடவேண்டும்.
அவருடைய அறப்போர் என்றும் தொடரவேண்டும். ஜனநாயக சந்தையில் தியாகம் விலைபோகாதது என்னைத் திரும்ப திரும்ப யோசிக்கவைக்கிறது.
ஏசுவுக்கு சிலுவையும், சாக்ரடீஸுக்கு நஞ்சும், புருனேவுக்கு விஷமும், கொடுத்த உலகம் தானே இந்த உலகம்!
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளார்.