மதிக்காத மத்திய அரசு.. தமிழர்கள் மீதான போர்.. நாஞ்சில் சம்பத் ஆவேசம்
தமிழக அரசு கடிதம் அனுப்பியும் மத்திய அரசு மதிக்க வில்லை. ஏறுதழுவுதல் என்ற பெயரிலாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கோரியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கும் கருத்து தமிழர்கள் மீதான போர் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கோரியிருந்த வழக்கில், உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என திட்டவட்டமாக கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது;
மத்திய அரசின் தோல்வி
சுப்ரீம் கோர்ட் இப்படி அறிவித்துள்ளது என்பது மத்திய அரசின் தோல்வியைக் காட்டுகிறது. அவசரச்சட்டம் ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வாருங்கள் என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் மத்திய அரசுக்கு கடிதம் அளித்தார்கள். அதற்கு மதிப்பளித்தாவது அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி கொண்டு வந்திருந்தால் இப்படி ஒரு ஆபத்தான பொறியில் சிக்கி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
தமிழர்களின் மீதான போர்
லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த செய்திக் கேட்டு கொதிக்கிறார்கள். ஒரு அறிவிக்கப்படாத போர் தமிழர்களின் மீது தொடுக்கப்பட்டது போல் உள்ளது. உடனடியாக குடியரசுத் தலைவரை சந்தித்து அவசரச் சட்டம் போட்டு நாளையே நடைமுறைப்படுத்துவதற்கு முன் வராவிட்டால் மத்திய அரசிடம் இருந்து தமிழகம் அன்னியமாகிவிடும் என்று எச்சரிக்கிறேன்.
கசப்பான உண்மை
தமிழக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் இது கொடுமையாக உள்ளது. பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.
ஏறுதழுவுதல்
பாஜகவின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமான இல.கணேசன் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று சொன்னார். அப்படி நடத்தலாம் என்றே நானும் கருதுகிறேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.