தனபால் அழகா இல்லாட்டி அவரோட மனைவிதான் கவலைப்படணும்.. "தெறி"க்க விட்ட நாஞ்சில் சம்பத்!
மதுரை: மதுரையில் திமுகவுக்குப் போட்டியாக அதிமுக போட்ட போட்டிக் கூட்டத்தில் அமைச்சர்கள், நாஞ்சில் சம்பத் என பலரும் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்பும் வகையில் பரபரப்பாக பேசி சூட்டைக் கிளப்பினர்.
அதிலும் குறிப்பாக அமைச்சர் செல்லுர் ராஜு பேசிய பேச்சால் மதுரையே பரபரப்பாகிக் கிடக்கிறது. முதல்வராக ஜெயலலிதா இருப்பதால்தான் திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திரமாக மதுரைக்கு வந்து போக முடிகிறது என்று அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதற்குப் போட்டியாக அதிமுக சார்பில் நேற்று மதுரையில் திமுக கூட்டம் நடந்த அதே பழங்காநத்தத்தில் கூட்டம் போட்டனர்.
'சட்டசபையில் அதிமுகவை கண்டு தெறித்து ஓடும் சண்டிக்குதிரைகள்' என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயக்குமார் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு ஆவேசமாக அனல் கக்கப் பேசினர்.
செல்லூர் ராஜு பேச்சுதான் இதில் பரபரப்பாக இருந்தது. அவர் பேசுகையில், திமுக ஆட்சியில், ஸ்டாலினால் மதுரைக்கு தைரியமாக வந்து செல்ல முடிந்ததா. அம்மா ஆட்சியினால்தான் வர முடிகிறது. இது தெரிந்தும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசலாமா. சட்டசபையில் எப்போதும் அம்மா, அம்மா என்று அமைச்சர்கள் சொல்வதாக திமுகவினர் பேசுகிறார்கள். எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த அம்மா பெயரை சொல்லாமல் வேறு யார் பெயரை நாங்கள் சொல்வது. அப்படித்தான் சொல்லுவோம் என்றார் ராஜு.
ஆர்.பி. உதயக்குமார் பேசுகையில், சட்டசபை மரபுகளை மதிக்காத திமுகவினர், வெளியில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சபாநாயகரை இழிவுபடுத்தும் இவர்கள், தாங்கள் செய்யும் தவறுகளை மறைத்துவிட்டு வெளியில் நடிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை பற்றி தமிழகத்தில் யார் பேசினாலும் அதை ஏற்று கொள்ளலாம். ஆனால் அதை ஸ்டாலின் பேசலாமா? சட்டசபையிலிருந்து அவர்களை தூக்கி வீசிவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார்.
உங்களை தமிழகத்திலிருந்தே தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி புரிந்த கருணாநிதி செய்த குறைபாடுகளை, தவறுகளை செம்மைபடுத்தி தமிழக மக்களின் நலனுக்காக வளர்ச்சி திட்டங்கள், வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் ஆட்சி நடத்தும் அழகைப் பார்த்து தாங்கி கொள்ளாத திமுகவினர் பொறாமையால் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபடுகின்றனர். சபாநாயகரை கேலி செய்கின்றனர் என்றார்.
நாஞ்சில் சம்பத் பேசுகையில், பல தலைவர்கள் அமர்ந்த சபாநாயகர் ஆசனத்திற்கு ஒரு வரலாறு உண்டு. இங்கிலாந்தில் செய்யப்பட்டது அது. அவ்வளவு உயர்ந்த ஆசனத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனபாலுக்கு அம்மா வழங்கி கவுரவித்திருக்கிறார். அதை பொறுக்க முடியாத திமுகவினர், சபாநாயகரை இழிவாக பேசுகின்றனர். அவர் அழகாக இல்லை என்கின்றனர். அவர் அழகில்லை என்று கவலைப்பட வேண்டியது அவர் மனைவி, இவர்களுக்கு ஏன் அந்த கவலை. சட்டசபை மாண்பு பற்றி ஸ்டாலினுக்குத்தான் தெரியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த துரைமுருகனுக்குமா அது தெரியாது. சட்டம் ஒழுங்கைப்பற்றி தி.மு.க.வினர் பேசலாமா? என்று ரொம்ப லென்த்தாக பேசிக் கொண்டே இருந்தார் சம்பத்.
ராத்திரி 12 மணிக்கு பக்கத்தில்தான் கூட்டமே முடிந்தது.. மக்களும் கொட்டாவி விட்டபடி இடத்தைக் காலி செய்தனர். கூட்டத்தினர் கலைந்துபோகும்போது அவர்களது வாயிலிருந்து உதிர்ந்த கேள்வி இது... ஆமா, ஸ்டாலின் பேசும்போது நிறைய குற்றம் சாட்டிப் பேசினாரு. அதுக்கு இவங்க யாருமே பதிலே சொல்லலையே?