9 பிரதமர்களை கேள்வி கேட்டு குட்டிச் சுவராகி கலிங்கப்பட்டியில் போராடும் வைகோ- நாஞ்சில் சம்பத் தாக்கு
திருச்சி: நாட்டின் 9 பிரதமர்களையே கேள்விகணைகளால் விரட்டிஅ கேட்டு கடைசியில் குட்டிச்சுவராகி கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு எதிராக போராடும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டுவிட்டார் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
திருச்சி கீழப்புதூரில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
மொரார்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், மன்மோகன் சிங் என 9 பிரதமர்களை கேள்விக்கணைகளால் விரட்டிய வைகோ குட்டிசுவராகி சொந்த ஊரில் மதுக்கடை அகற்ற போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வைகோ பாதுகாவலரின் மதுக்கடை
கலிங்கப்பட்டியில் 1987ல் இருந்து மதுக்கடை இருக்கிறது. அந்த கடையின் முதல் உரிமையாளர் வைகோவின் முதன்மை பாதுகாவலராக இருக்கும் காளிராஜ்தான். அந்த கடையை இப்போது அடித்து உடைத்து நாடகமாடுகிறார் வைகோ.
பரிதாப வைகோ
சொந்த ஊரில் தனது தாயை போராட வைத்து விளம்பரம் தேடும் அளவுக்கு வைகோவின் நிலை பரிதாபத்திற்குரியதாக போனதுதான் வேதனை. சரி முதல்நாள் போராட்டத்தில் இறங்கிய வைகோவின் தாய், கலவரம் நடந்த அடுத்த நாள் ஏன் போராட்டத்திற்கு வரவில்லை. நான் கலவரம் செய்யப்போகிறேன் வராதே என அம்மாவை வீட்டுக்குள் இருக்க சொல்லிவிட்டாரா வைகோ. தனது அரசியல் நாடகத்திற்காக எதையும் செய்வார் வைகோ.
இழவு வீடு தேடி..
அப்படிப்பட்ட வைகோ தமிழகத்தில் யாராவது சாக மாட்டார்களா என காத்துகிடக்கிறார். செய்தி கிடைத்ததும் அடுத்து உடனே அங்குபோய் மலர் வளையம் வைக்க சென்றுவிடுகிறார். தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி. ராமலிங்கத்தின் தாயார் மரணத்திற்கு செல்கிறார். அந்த சாவுக்கு தி.மு.க.வில் இருந்து ஸ்டாலினோ, அழகிரியோ, தி.மு.க.காரன் ஒருத்தன்கூட வரல. ஆனால் வைகோ போகிறார்.
யார் காந்தியவாதி?
காந்தியவாதி சசி பெருமாள் மரணத்திற்கு தமிழக அரசு பதில் சொல்லணுமாம். அவருக்கு மணிமண்டபம் கட்ட ரூ5 லட்சம் தருகிறாராம் வைகோ. நான் கேட்கிறேன், சசி பெருமாள் காந்தியவாதியா இருக்க முடியாது. சசிபெருமாளுக்கு 2 மனைவி. அவர் எப்படி காந்தியவாதியாக இருக்க முடியும். காந்தி தனது வாழ்நாள் முழுக்க பிரம்மச்சாரியைப்போல் வாழ்ந்தவர். வெற்று விளம்பரத்திற்காக எதையும் செய்யதவர். ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியில் போராட்டங்களை கையில் எடுத்தவர். அவர் வழியை பின்பற்றியதாக சொல்லப்படும் சசிபெருமாள், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். 60 வயதில் 75 அடி செல்போன் டவரில் ஏறினால் நிச்சயம் சாவுதான் மிஞ்சும்.
தீக்குளித்தவர்களுக்கு மணி மண்டபம்..
காந்தியவாதிக்கு சகிப்புதன்மை வேண்டும். சசிபெருமாளிடம் அப்படியான சகிப்புதன்மை இல்லை. அப்படிப்பட்டவர் எப்படி காந்தியவாதியாக முடியும். வைகோ சசிபெருமாளுக்கு மணிமண்டபம் கட்ட ரூ 5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். வைகோவிற்காக உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், நொச்சிப்பட்டி தண்டபாணி என பலர் தீக்குளித்து மாண்டுபோனார்கள். அவர்களுக்கு எள்ளளவாவது உதவிகள் செய்திருப்பாரா. அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வைகோ நினைக்கவில்லையே ஏன்?
சிகரெட்டை ஆதரிப்பதா?
ஒருத்தன் குடிக்கிற சிகரெட் 10 பேருக்கு தீமை விளைவிக்குதுன்னு அதில் சொல்லப்படுது. ஆனால் வைகோ, சிகரெட் குடிப்பதால் சமுதாயத்திற்கு கேடு இல்லை என்கிறார். அவரது மகன் துரை வையாபுரி, மெரிட்டில் சிகரெட் ஏஜென்ஸியை வாங்கியதாக வைகோ சொல்கிறார். அந்த நிறுவனத்துக்கும், உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஏன் வைகோ ரூ 13 லட்சமும், அவரது மனைவி ரூ43 லட்சமும் அந்த கம்பெனிக்கு கடன் கொடுத்ததாக வைகோ தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். எப்படியெல்லாம் நாடகம் ஆடனுமோ அப்படி ஆடி மக்களின் நன்மதிப்பை பெற்றுவிடலாம் என நினைக்கிறார் வைகோ. அது சாத்தியமே இல்லை.
சங்கிலியை தேடிய விஜயகாந்த்
விஜயாகாந்த், மனித சங்கிலி நடத்துவோம் என அறிவித்துவிட்டு அங்குபோய் மனிதர்கள் எல்லாம் வந்துட்டாங்க சங்கிலி எங்கே என கேட்கிறார். இப்படி தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களும் வழியில்லாமல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கையிலெடுத்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.
12 கள்ள ஓட்டு
கள்ள ஓட்டுபோடுவதை தமிழ்நாட்டுக்கு கற்றுதந்தவரே கருணாநிதிதான் காரணம். நான் கூட அந்த இயக்கத்தில் இருக்குபோது 12 ஓட்டு கள்ள ஓட்டு போட்டிருக்கேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை.