கமல் ஏன் கருத்து சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டும்? கேட்கிறார் நாஞ்சில் சம்பத்
நடிகர் கமல்ஹாசன் கருத்து சொல்லி ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கேட்டுள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கலைத்துறையில் நீண்ட பயணம் செல்லக் கூடியவர் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அவர் கருத்துக்களை கூறி மாட்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதாக கூறிய கமல்ஹாசன் பலரின் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறார். அமைச்சர்கள் ஒருமையில் பேசுவதோடு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதனிடையே கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மிரட்டக்கூடாது என்று கூறினார்.
தமிழ்த்திரை உலகிற்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் எனில் அது கமலால் மட்டுமே முடியும். அவல் எங்கே கிடைக்கிறது என ஸ்டாலின் ஏங்கும் போது கமல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். ஊழல் நடக்கிறது என்று மட்டும் சொல்லாமல் யார் செய்கிறார்கள் என்பதையும் கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கலைத்துறையில் நீண்ட பயணம் செய்யக்கூடிய நடிகர் கமல்ஹாசன் கருத்து சொல்லி ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும் கேரளா, கர்நாடகாவில் இப்படி சொல்லமாட்டார்களா என்று கேட்டுள்ள நாஞ்சில் சம்பத், தமிழ் கலாசாரத்துக்கு எதிராக 'இந்து' அமைப்பு எப்படி போராட வேண்டும்? என்றும் நாஞ்சில் சம்பத் கேட்டுள்ளார்.
அர்ஜூன் சம்பத் விளம்பரத்துக்காக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நாஞ்சில் சம்பத். கடந்த சில நாட்களாகவே நாஞ்சில் சம்பத், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊடகங்களின் படையெடுப்பால் நோஞ்சான்கள் எல்லாம் வருகிறார்கள் என்றார்.
நமது எம்ஜிஆரில் எடப்பாடி பழனிச்சாமி இருட்டடிப்பு செய்யப்படவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகளும், அமைச்சர்கள் பேச்சு, சட்டசபை நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை இருட்டடிப்பு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.