“வராது வந்த மாமணியாம்” டிடிவி தினகரன்… தாங்க முடியாத இனோவா சம்பத்தின் அலப்பரை
“வராது வந்த மாமணி” என்று டிடிவி தினகரனை நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளியுள்ளார். தளவாய் சுந்தரத்தை டெல்லியின் சிறப்பு பிரதிநிதியாய் நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிக்கத்தான் இவ்வளவு அளப்பறை.
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாய் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டார். அவருக்காக நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று டிடிவி தினகரனை "வராது வந்த மாமணி" என்று நாஞ்சில் சம்பத் அளந்துவிட்டிருக்கிறார்.
"கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் தளவாய் சுந்தரம் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாய் நியமிக்கப்பட்டார் என்ற செய்தி காதில் தேனாய்விழுந்தது" என்று கூறிய நாஞ்சில் சம்பத், அவருக்கு அந்த பொறுப்பை வழங்கிய முதல்வர் எடப்பாடிக்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும், "சிறையில் இருந்தாலும் சிந்தையெல்லாம் சிம்மாசனசம் போட்டு இருக்கின்ற" கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்களுக்கும், வராது வந்த மாமணியாம் கழக துணை பொதுச் செயலாளர் எங்கள் திசையெல்லாம் தேன்சொரியும்" டிடிவி தினகரனுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளை நாஞ்சில் சம்பத் தேடுகிறாராம்.. கிடைக்கவே இல்லையாம்.
"நாஞ்சில் நாட்டில் மரபார்ந்த பெருமைக்குரிய குடும்பத்தில் பிறந்து சட்டப்பேரவை உறுப்பினராய், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராய், மாட்சிமை தங்கிய அமைச்சராய் நிர்வாகத்திலும், குமாரி மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், அமைப்பு செயலாளர் என அம்மா தந்த பொறுப்புகளை முறையாக நிறைவேற்றிய செயல் மறவர் தளவாய் சுந்தரம் ஒரு தேர்ந்த வழக்கறிஞராய் சிறந்த நிர்வாகியை ஆங்கிலத்தில் அளவற்ற புலமைமிக்கவராய் இருக்கும் எங்கள் அண்ணன் தளவாய் சுந்தரம் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாய் முத்திரை பதிப்பார்" என்று வானளாவ தளவாய் சுந்தரத்தையும் புகழ்ந்து தள்ளியுள்ளார் இனோவா சம்பத்.
தளவாய் சுந்தரம், "யமுனை கரையில் கழகத்திற்கு அரணாய் இருப்பார், இயக்கத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்கின்ற வகையில் ஆற்றப்போகும் அரும்பணிக்கு காலமகள் கைகொடுப்பார் என்று தளவாய் அண்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மட்டில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்" என்று வாழ்த்து மழையை அள்ளிவிட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
எதை எதையெல்லாம் தமிழ் நாடு தாங்கப் போகுதே!