திமுக -பாஜக -விஜயகாந்த் கூட்டணி சேர்க்க முயற்சியா? - நெப்போலியன் விளக்கம்
திமுக - பாஜக - தேமுதிக இடையே புதிய கூட்டணி உருவாக்க தாம் முயற்சி மேற்கொண்டதாக வெளியாகும் செய்திகளுக்கு முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் நெப்போலியன்.
திமுகவில் மிகவும் முக்கியமான இடம் வகித்த நடிகர் நெப்போலியன் இப்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திமுக உள் அரசியல் பிடிக்காமலல் அரசியலிலிருந்தே ஒதுங்கி நின்ற அவரை விடாப்பிடியாக மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தது பாஜக.
மாநில அளவில் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை நெப்போலியனுக்கு அளித்திருந்தாலும், அவர் இன்னும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், திமுக - தேமுதிக - பாஜக கூட்டணிக்கான பாலத்தை போட்டவரே நெப்போலியன்தான் என்கிற ரீதியில் முன்னணி மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து என்ன சொல்கிறார் நெப்போலியன்?
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்திருந்த அவரைச் சந்தித்த நமது செய்தியாளர் இதுகுறித்து கேட்டபோது, "அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த எனக்கு மீண்டும் அழைத்து கட்சிப் பணி தந்தார்கள். ஆனால் இப்போது நான் என் சொந்த வேலையாக அமெரிக்காவில் இருக்கிறேன். சென்னைக்குச் சென்றே பல மாதங்கள் ஆகிவிட்டன.
ஆனால் என்னைச் சுற்றி தேவையில்லாத கற்பனைச் செய்திகளை மீடியா வெளியிட்டு வருகிறது. விஜயகாந்தும் சரத்குமாரும் எனக்கு இப்போதும் நெருங்கிய நண்பர்கள்தான். அரசியல் தாண்டிய நட்பு அது. கடந்த ஆண்டு விஜயகாந்தைச் சந்தித்தது கூட அந்த நட்பின் அடிப்படையில்தான்.
கூட்டணிகள் குறித்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் நான் எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படவில்லை என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்," என்றார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகம் செல்லும் உத்தேசம் இல்லையா? என்று கேட்டதற்கு, "நான் எப்போது வருவேன் என்றுதான் அங்கும் (தமிழத்திலும்) காத்திருக்கிறார்கள். விரைவில் வருவேன்," என்றார்.