போட்டியிட தயங்கும் நாராயணசாமி - ரங்கசாமி மருமகனை களம் இறக்க முயற்சி
புதுச்சேரி: புதுவை லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் நாரயாணசாமி காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ போட்டியிடப் பயந்து கொண்டு, முதல்வர் ரங்கசாமியின் மருமகனை களம் இறக்க முயற்சி செய்து வருகிறாராம்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றால் புதுவையில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் இந்த கூட்டணி அமையவில்லை.
புதுவையை பொருத்தவரை தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு கணிசமான ஓட்டு உள்ளது. இந்த ஓட்டுகள் கிடைத்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அந்த கூட்டணி அமையாததால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நாராயணசாமியும், முதல்வர் ரங்கசாமியும் எதிரியாக உள்ளனர். இந்த தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த உள்ளது. நாராயணசாமியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று ரங்கசாமி வியூகம் வகுத்து வந்தார்.
ரங்கசாமி புதுவையில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வன்னியர்கள் ஓட்டு ஒட்டுமொத்தமாக என்.ஆர்.காங்கிரசுக்கு கிடைத்தது. அதைபோல இந்த தேர்தலிலும் வன்னியர்கள் ஓட்டு என்.ஆர்.காங்கிரசுக்கு கிடைக்கும் என ரங்கசாமி எதிர்பார்க்கிறார்.
நாராயணசாமியை பொருத்தவரை அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் அவருடைய சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுவையில் குறைவான எண்ணிக்கையிலே உள்ளனர். வன்னியர்கள் ஓட்டு ரங்கசாமிக்கு கிடைக்கும் பட்சத்தில் அது நாராயணசாமிக்கு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.
எனவே நாரயாணசாமி தேர்தலில் நிற்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரசில் வன்னியர் ஒருவரை நிறுத்தினால் வன்னியர்கள் ஓட்டு காங்கிரசுக்கு கிடைக்கும். இதன் மூலம் எளிதாக காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என நாரயாணசாமி கணக்கு போடுகிறார்.
எனவே வன்னியர் சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க நாரயாணசாமி திடீரென முயற்சி எடுத்து வருகிறார். நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியின் அண்ணனின் மருமகன் ஆவார்.
நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்தும் திட்டத்துடன் அவரை நாராயணசாமி நேற்று திடீரென டெல்லி அழைத்து சென்றுள்ளார். டெல்லியில் மேலிட தலைவர்களிடம் அவரை அறிமுகப்படுத்தி வேட்பாளராக நிறுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.