புதுச்சேரி அமைச்சரவையில் திமுக... கருணாநிதியைச் சந்தித்த பின் ‘ஏர்போர்ட்’ நாராயணசாமி பேட்டி
சென்னை: புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி, சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தைப் போலவே கடந்த 16ம் தேதி புதுச்சேரியிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், கூட்டணி கட்சியான திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அங்கு அமைகிறது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில், புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் புதுச்சேரி முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், இன்று சென்னை வந்த நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நாராயணசாமி. அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வு...
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி 17 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கிற வாய்ப்பை புதுவை மாநில மக்கள் எங்களுக்கு கொடுத் திருக்கிறார்கள். நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் முன்மொழிய சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வைத்தியலிங்கம் வழிமொழிய ஏகமனதாக நான் புதுவை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.
கருணாநிதியுடன் சந்திப்பு...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆசியோடும் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆசியோடும் நான் புதுவை மாநில காங் கிரஸ் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இங்கு மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்து நன்றி கூறி ஆசி பெற்றுள்ளேன்.
முன்மாதிரி மாநிலமாக்குவோம்...
காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை தருவதற்கு அனைத்து நட வடிக்கைகளையும் எடுப்போம். புதுச்சேரி மாநிலத்தில் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து முன் மாதிரி மாநிலமாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மத்திய அரசுடன் நல்லுறவு...
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி நடக்கிறது. அப்படி இருந்தாலும் புதுவை மாநில மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட்டு நல்ல திட்டங்களை கொண்டு வரவும், வேலை வாய்ப்புகள் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
ஆட்சி அமைக்க கோரிக்கை...
இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கடிதம் பெற்றுள்ளோம். அந்த கடிதத்தை துணை நிலை ஆளுனரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரேதசமாக உள்ளதால் இந்த ஆதரவு கடிதத்தை கவர்னர் உள்துறை அமைச்சருக்கு அனுப்பி அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று பின்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
நமச்சிவாயத்துக்கு பதவி?
காங்கிரசில் யார்- யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் முடிவு செய்து அறிவிப்பார்.
அமைச்சரவையில் திமுக?
இது சம்பந்தமாக எங்கள் கட்சி தலைவரும், தி.மு.க. தலைவர் கருணா நிதியும் கலந்து பேசி முடிவு செய்வார்கள்.
எந்த தொகுதியில் போட்டி?
அது சம்பந்தமாக எங்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் கலந்து பேசி முடிவு செய்வோம்.
மோதல்கள்...
அந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டது. சில முடிவுகள் எடுக்கும் போது சிறு சிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. சுமூகமாக தீர்க்கப்பட்ட பிரச்சினைதான்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.