புதுச்சேரியில் மது விலக்கா.. சான்ஸே இல்லை.. அடித்துக் கூறும் நாராயணசாமி
சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை வந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அப்போது புதுவையில் மது விலக்கை அமல்படுத்தும் சாத்தியம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாராயணசாமி தலைமையில் அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட நாராயணசாமி இன்று சென்னை வந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன். அமைச்சரவை பதவியேற்புக்கு முன்னர் அதிகாரிகளிடம் துணைநிலை ஆளுநர் பேசியதில் தவறு இல்லை.
புதுச்சேரி மாநிலத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை. புதுச்சேரியில் நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றார் நாராயணசாமி.
புதுவையில் மது விலக்குக்கு சாத்தியமே இல்லை என்று முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.