கர்நாடகத்தின் போக்கு நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் கேடு.. நாராயணசாமி பொளேர்
புதுச்சேரி: உச்சநீதிமன்றத்தை மதிப்பதில்லை என்ற கர்நாடகத்தின் போக்கு நாட்டுக்கும், தேச ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் கேடாகவே முடியும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தேவையில்லாமல் நீதித்துறைக்கும், சட்டசபைக்கும் இடையே மோதலைத் தூண்டி விட்டு அதில் குளிர் காயப் பார்க்கிறது கர்நாடகா என்றும் நாராயணசாமி சாடியுள்ளார்.
இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில், காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது கர்நாடகா. இது ஏற்க முடியாது. இது தேவையில்லாத பிடிவாதப் போக்கு.
புதுச்சேரியிலும், தமிழகத்திலும் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் வேண்டி விவசாயிகள் காத்துள்ளனர். காரைக்கால் பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியைச் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தண்ணீர் உரிய காலத்தில் வராவிட்டால், பெரும் சீரழிவை விவசாயிகள் சந்திக்க நேரிடும்.
கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதைப் புறக்கணிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது நாட்டுக்கும், தேச ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் கேடாகவே முடியும். தேவையில்லாமல் உச்சநீதிமன்றத்திற்கும், சட்டசபைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி அதில் குளிர் காயப் பார்க்கிறது கர்நாடகா என்றார் நாராயணசாமி.