புதுச்சேரி முதல்வரானார் நாராயணசாமி.. நமச்சிவாயம் உள்ளிட்ட 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய முதல்வராக நாராயணசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நாராயணசாமியுடன் 5 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. புதுவையின் 19வது முதல்வர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. இக்கூட்டணிக்கு 17 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து இன்று நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது.
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்றனர். முதலில் நாராயணசாமி முதல்வராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். கடவுள் பெயரில் அவர் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்குத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர்களாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மல்லாடி கிருஷ்ணா ராவ் தெலுங்கில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஷாஜகான், மறைந்த கேரள மாநில முன்னாள் ஆளுநர் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயரின் மகன் ஆவார்.
மு.க.ஸ்டாலின் - இளங்கோவன் பங்கேற்பு
பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதேபோல காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொன்னாடை போர்த்திய கிரண் பேடி
பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் நாராயணசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பொன்னாடை போர்த்தி கை குலுக்க வாழ்த்து தெரிவித்தார். அதேபோல அமைச்சர்களும் கிரண் பேடிக்கு பொன்னாடை போர்த்தினர்.