புதுவை ஆளுநர் கிரண்பேடியுடன் நாராயணசாமி சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
புதுச்சேரி: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணன்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த மே 16-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள் 30 தொகுதிகளில் காங்கிரஸ்- திமுக கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றியது; காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது.
இதையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியானது. ஆனால் யார் முதல்வர் என்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. பின்னர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்த நாராயணசாமி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தமக்கு ஆதரவு தந்துள்ள 17 எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தையும் ஆளுநரிடம் நாராயணசாமி வழங்கினார்.
இச்சந்திப்பின் போது புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் உடனிருந்தார். விரைவில் நாராயணசாமி ஆட்சி அமைக்க ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுக்க உள்ளார்.
இதனிடையே ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இன்று மாலை நானும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறோம். காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுலுடன் புதுவை அமைச்சரவை குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்றார்.