ஆனது ஆச்சு... இன்னொரு 5 நிமிஷம் பேசிக்கிறேன்.. பெர்மிஷன் கேட்ட நாராயணசாமி!
இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க என்று பெர்மிசன் கேட்டு மத்திய அரசை திட்டினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ஓராண்டு நிறைவடைவதை எதிர்கட்சியினர் கருப்பு தினமாக அனுஷ்டிக்கின்றனர். புதுச்சேரியில் பேசிய நாராயணசாமி மத்திய அரசை கடுமையாக சாடினார். கூடுதலாக 5 நிமிஷம் வேண்டும் என்று தொண்டர்களிடம் பெர்மிஷன் கேட்டார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு சட்டத்தால் மக்கள் கடந்த ஓராண்டாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, புதுவையில் நடைபெற்ற பேராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்.
சுதேசி பஞ்சாலை அருகே துவங்கிய பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக வந்து தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பணமதிப்பிழப்பு சட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக சாடினார்.
பேரணியின் நிறைவாக பணமதிப்பிழப்பு காரணமாக பல்வேறு இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசை கடுமையாக சாடினார். மோடியின் செல்லாத ரூபாய் அறிவிப்பினால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர் என்றும் குற்றம் சாட்டினார். அதிக நேரம் பேசுவதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்று யோசித்தாரோ என்னவோ, இன்னும் 5 நிமிடம் நேரம் கொடுங்க பேசி முடித்து விடுகிறேன் என்று பெர்மிஷன் கேட்டு விட்டு பேசினார்.