தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி போதைப்பொருள்- 4 பேர் கைது
சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்ததாக 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எச்.ஏ-1 பெட்டியில் சென்னைக்கு போதை பொருட்கள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் காலை 7.10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான வகையில் பதில் அளித்தனர்.
அவர்களுடைய உடைமைகள் சோதனை செய்யப்பட்டதில் ‘ஆம்பெடமைன்' என்ற தடை செய்யப்பட்ட போதை பொருள் 25.160 கிலோ மற்றும் 32 லட்சத்து 85 ஆயிரம் ‘ஜோல்பிடெம்' மாத்திரைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம்பெடமைன் பவுடர் ஆண்மை உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என்பதும், ‘ஜோல்பிடெம்' மாத்திரைகள் கட்டாய தூக்கத்துக்கு நோயாளிகள் பயன்படுத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றை வியாபார நோக்கத்தோடு டெல்லியிருந்து சென்னை ஏழுகிணறில் உள்ள மருந்து கிடங்கிற்கு கொண்டுவந்தோம் என்று அந்த நபர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ கிடங்கிற்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் மற்றும் மருந்து-மாத்திரைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்திவந்த குற்றத்துக்காக காதர்மொகிதீன் முகமதுஅலி ஜின்னா, ஜாகீர் உசேன் மற்றும் மருந்து கிடங்கில் வேலைபார்த்த சையது இப்ராகிம், சாகுல்அமீது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது போதை பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் மாத்திரைகளின் மதிப்பு ரூ.3 கோடி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.