ஜி.கே.வாசனுக்குத் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த நரிக்குறவர்கள்!
சென்னை: புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசனுக்கு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து நேரில் வாழ்த்து தெரிவித்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிப் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவருக்கு ஆதரவாக பலரும் காங்கிரஸிலிருந்து விலகி வருகின்றனர். தினந்தோறும் அவரது இல்ல- அலுவலகத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து வாசனைச் சந்தித்தனர். குடும்பம் குடும்பமாக அவர்கள் வந்திருந்தனர்.
வாசனுக்கும், அவரது புதிய கட்சிக்கும் தங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் வாசன் படத்தையும் பேட்ஜ் போல் அவர்கள் தங்களது சட்டை, சேலையில் குத்தியிருந்தனர்.
மேலும் திருச்சியில் நடைபெறவுள்ள வாசன் கட்சியின் தொடக்க விழாவிலும் பெரும் திரளாக கலந்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் வாசனிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட வாசன், நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு சால்வையும் அணிவித்து மகிழ்ந்தார்.
இத்தகவல்களை வழக்கறிஞர் மயிலை சத்யா தெரிவித்துள்ளார்.