சசிகலாவிற்காக பல தியாகங்களைச் செய்துள்ளார் நடராஜன் - டிடிவி தினகரன்
நடராஜன் படத்திறப்பு விழாவில் பேசிய தினகரன், திவாகரன் ஆகியோர் கண் கலங்கியபடியே நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தஞ்சாவூர்: சசிகலாவிற்காக பல தியாகங்களை செய்தவர் நடராஜன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடராஜன் மரணமடைந்து 9ஆம் நாள் படத்திறப்பு விழாவில் பேசிய அவர் கண் கலங்கியபடியே பேசினார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், கடந்த 20ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா பரோலில் வந்து தஞ்சாவூரில் தங்கியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் தமிழரசி மண்டபத்தில் படத்திறப்பு நடைபெற்றது.
தலைவர்கள் பங்கேற்பு
தினகரன் வரவேற்புரையாற்ற உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடராஜன் உருவப்படத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, சசிகலாவின் சகோதரர் திவாகரன் பெற்றுக்கொண்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தா.பாண்டியன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் நடராஜனுடனான தங்களது நினைவுகள் குறித்து பேசினர்.
நடராஜன் தியாகம்
தினகரன் பேசிய போது, சசிகலாவுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது, நன்றாக படித்த பல வரன்களைப் பார்த்தனர். சித்தப்பா நடராசன் நல்லவர் என்பதால், அவரை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சின்னம்மா சசிகலாவுக்குத் திருமணம் செய்துவைத்தனர். சசிகலா நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர் நடராசன் என்று கூறினார்.
நினைவுச் சின்னம்
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைவதற்குப் பெரும் துணையாக இருந்தவர் நடராசன் என்று பேசினார் பழ நெடுமாறன். கல்லணைக்கும் பெரியகோயிலுக்கும் வருகின்றவர்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் வருவதுபோல நினைவுச் சின்னத்தை அமைத்த நடராசன், இன்னும் மறையவில்லை. அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று இ. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசினார்.
பதவிக்கு ஆசைப்படாதவர்
நினைவு மலரை வெளியிட்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எதையும் தாங்கிக்கொள்ளும் சசிகலா, நடராசன் மறைவையும் தாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய நடராசன், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர் என்று கூறினார்.