கணவர் நடராஜன் கவலைக்கிடம் - சசிகலா பரோலில் வருவாரா?
கணவர் நடராஜன் கவலைக்கிடமாக இருப்பதால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவரை கவனித்துக்கொள்வதற்காக சசிகலா பரோலில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாகவே கல்லீரலில் பிரச்சினை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தற்போது குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.
நேற்றைய தினம் குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடராஜன் கவலைக்கிடமாக உள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
தன் கணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்த சசிகலா வேதனை அடைந்துள்ளார்.
கணவரை நினைத்து கவலையடைந்திருக்கும் சசிகலாவை அவரது அண்ணன் மனைவி இளவரசிதான் ஆறுதல் கூறி தேற்றி வருகிறார்.
கணவன் கவலைக்கிடமாக இருப்பதால் உடனிருந்து கவனித்துக்கொள்வதற்காக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு எதுவும் விண்ணப்பிக்கவில்லையாம் சசிகலா.
சசிகலா கணவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் விரும்புகின்றனர். ஆனால் தண்டனை பெற்றுள்ள நிலையில் சசிகலா இப்போதைக்கு வெளியே வர விரும்பவில்லை என்றே தெரிகிறது.