சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 'நடராஜன்'
சசிகலாவை பரோலில் கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார் நடராஜன்.
Recommended Video
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பரோலில் கொண்டு வந்து ஜூன் மாதத்தில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன் என அறிவித்திருந்தார் காலமான நடராஜன்.
ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு சசிகலா கணவர் நடராஜன் முயற்சித்தார். ஜெயலலிதா உடல் புதைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பத்திரிகையார்களை அதே இடத்தில் சந்தித்தார் நடராஜன்.
நடராஜன் சூளுரையால் பரபரப்பு
அப்போது, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை அரசியல் தலைவியாக உருவாக்கியதே தாங்கள்தான் என்றும் அதிமுகவை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம் என சூளுரைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்த சில நாட்களில் நடராஜன் அமைதி காத்தார்.
அதிமுக குடும்ப சொத்து
சசிகலா மெல்ல மெல்ல தலையெடுத்தார். சசிகலாவை அரசியலுக்குள் தள்ளிவிட்டதே நடராஜன் என கூறப்பட்டது. பின்னர் அதிமுகவில் சலசலப்பும் பிரிவுகளும் ஏற்பட்டன. அப்போது தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடராஜன், அதிமுக எங்களுடையது; நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடல்நலம் பாதிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்ற நிலையில் தினகரனின் அத்தியாயம் தொடங்கியது. இதை நடராஜன் விரும்பாமல் இருந்தார் என்றே கூறப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் நடராஜன்.
ஜூனில் பிரசார திட்டம்
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நீண்ட பேட்டியில், சசிகலாவுடன் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். இதற்காக சசிகலாவை பரோலில் கொண்டு வருவேன் என அறிவித்திருந்தார் நடராஜன்.
நிறைவேறாமல் போன திட்டம்
ஆனால் சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் நடராஜனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி சிறைக்கு போவதை தவிர்த்தார் நடராஜன். இந்த நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது சசிகலாவுடனான தமிழகம் முழுவதுமான சுற்றுப் பயணம் நிறைவேறாமலேயே போய்விட்டது.