திண்டுக்கல் அதிமுகவில் மீண்டும் சீனுக்கு வந்த 'நத்தம்’... இணக்கக் கூட்டத்தில் உச்சகட்ட புலம்பல்!
அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து கூட்டம் நடத்தின. இதில் பேசிய ஓபிஎஸ் அணியின் நத்தம் விஸ்வநாதன் தாங்கள் எப்படியெல்லாம் ஒதுக்கப்பட்டோம் என குமுறினார்.
Recommended Video
சென்னை: அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற ஓபிஎஸ் அணியின் கூக்குரலுக்கு மதிப்பளித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஊழியர் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அழைக்கப்பட்டார். இக்கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் அணி என்பதற்காக எப்படியெல்லாம் ஒதுக்கப்பட்டோம் என புலம்பித் தள்ளிவிட்டார்.
அதிமுக அணிகள் இணைந்த பின்னரும் கீழ்மட்டத்தில் இணக்கம் இல்லை என மைத்ரேயன் பொங்கினார். அவருக்கு ஆதரவாக நத்தம் விஸ்வநாதனும் சவுண்டு விட்டுப் பார்த்தார்.
அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை என எச்சரிக்கையும் விடுத்தார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ. வி.பி.பி. பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இணக்க கூட்டம்
ஓபிஎஸ் அணி என்பதால் இதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஊழியர் கூட்டம் என பெயரிடப்பட்டாலும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியின் இணக்க கூட்டமாகத்தான் இது நடைபெற்றது.
இத்தனை துரோகமா?
இதை தமது பேச்சில் நத்தம் விஸ்வநாதன் சுட்டிக்காட்டினார். மேலும் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் பார்த்ததைவிட கடந்த ஒன்றரை ஆண்டு காலம் நான் சந்தித்த துரோகங்கள் அதிகம். அத்தனை அனுபவங்கள் கிடைத்தன.
பரிந்துரைக்கவில்லையே...
ஓபிஎஸ் ஆதரவாளர் என யார் வந்தாலும் அவர்களுக்கு பரிந்துரை கிடையாது; திமுகவினருக்கு வேண்டுமானால் செய்வேன் என சிலர் கூறியிருக்கிறார்கள். ஓபிஎஸ் அணியினருக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கர்த்தர் மன்னிப்பாராக.
சசிகலா அண்ட் கோ போய்விட்டது
இரு அணிகள் இணைந்த பின்னர் இணக்கமாக இருந்திருந்தால் இந்த இணக்கக் கூட்டமே தேவையே இல்லையே... எங்களைப் பொறுத்தவரை சசிகலா கும்பல் கட்சியை விட்டு போக வேண்டும் என்பதற்காக தர்ம யுத்தம் நடத்தினோம். அந்த கோரிக்கை நிறைவேறிவிட்டது.
இனியும் வேண்டாம் பிளவு
எதிர்காலத்தில் இதுபோல கட்சியில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இதை சுட்டிக்காட்டுகிறேன். இனி அனைவரும் இணைந்தே செயல்படுவோம். திண்டுக்கல் மாவட்டத்தில் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்கு அமைச்சர் சீனிவாசன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் கூறினார்.