வழக்குகளில் இருந்து தப்பிக்க மாஜி 'நத்தம்' பகீரத முயற்சி.. அவரை சந்தித்தாராம்?
சென்னை: தன் மீதான வழக்கு நெருக்கடியை சமாளிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தீவிர முயற்சி செய்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அரசில் ஐவர் அணியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கடந்த ஆட்சியின் கடைசி காலத்தில் நத்தம் விஸ்வநாதன் ஓரம்கட்டப்பட்டார். இருந்தாலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா.
அதுவும், அவரால் வெல்ல முடியாத அளவுக்கு திமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆத்தூர் தொகுதியில் திண்டுக்கல் ஐ. பெரியசாமியை எதிர்த்து நிற்க வைத்தார் ஜெயலலிதா. அவர் எதிர்பார்த்தபடியே நத்தம் விஸ்வநாதன் வெல்லவில்லை. இதையடுத்து அவரிடம் இருந்த திண்டுக்கல் மாவட்ட செயலர் பதவியும் பறிக்கப்பட்டது.
அதன்பின்னர் கட்சியில் எந்த செல்வாக்கும் இல்லாமல் இருந்து வந்தார் நத்தம் விஸ்வநாதன். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் தலை காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் சசிகலா தரப்பு கட்டுகொள்ளவில்லை. முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் தன் மீதுள்ள வழக்கு நெருக்கடியை சமாளிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் நத்தம் விஸ்வநாதன். அதன் ஒருகட்டமாக துக்ளக்கின் புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தியை நேரில் சந்தித்து பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.