நத்தம் கூடாரம் சுத்தம்: மாசெ பதவியே போச்சே... திருப்பரங்குன்றத்தில் சீட் கிடைக்குமா?
சென்னை: திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவான சீனிவேல், உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அந்த தொகுதியை குறிவைத்து முக்கிய தலைகள் காய் நகர்த்தி வருகின்றனர்.
நத்தம் விஸ்வநாதன் எப்படியாவது திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்று அமைச்சரவைக்குள் நுழைந்து விட வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் அவரது மாவட்ட செயலாளர் பதவியே பறிபோயுள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட கட்சித்தலைமை வாய்ப்பு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் சீனிவேல். தேர்தலில் வெற்றி பெற்றதுகூட தெரியாத நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்தார். தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை சீனிவேலின் மகன் செல்வக்குமார்தான் வாங்கினார்.
சுயநினைவு திரும்பாமலேயே கடந்த மாதம் 25ம் தேதி அவர் உயிரிழந்தார். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்பட முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். சீனிவேல் இறந்ததால், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது.
நத்தம் விஸ்வநாதன்
திருப்பரங்குன்றத்தைக் குறிவைத்து, தோற்றுப்போன முன்னாள் மாண்புமிகுக்கள் பலர், போயஸ்தோட்டத்தை வலம் வந்தனர். இதில் முன்னிலையில் இருந்தவர் நத்தம் விசுவநாதன்.
நத்தம் கூடாரம் சுத்தம்
ஆத்தூரில் விட்டதை எப்படியாவது திருப்பரங்குன்றத்தில் பிடித்து எம்.எல்.ஏவாகி அமைச்சராகி விடவேண்டும் என்று கனவு கண்டு வந்தார் நத்தம் விஸ்வநாதன். அவரது கனவு வெறும் கனவாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக நத்தத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் முகாம் மாறத் தொடங்கி விட்டனராம்.
இடைத்தேர்தல் செலவு
ஆத்தூரில் பெரியசாமியிடம் தோற்ற நத்தம் விசுவநாதனை நிறுத்தினால் தாராளமாக பணத்தை செலவு செய்து திருமங்கலம் பாணியில் இடைத்தேர்தலில் ஜெயிப்பதற்கு அவரால்தான் முடியும் என்று பேசப்பட்டது.
தயாராகும் திருப்பரங்குன்றம்
ஐநூறு வாக்காளர்களுக்கு ஒரு ஏஜெண்ட் என பூத் கமிட்டி உறுப்பினர்களை இப்போதே தேர்வு செய்யும் வேலை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
சீனிவேல் மகன் செல்வகுமார்
தி.மு.க. வேட்பாளர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனை 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சீனிவேல் ஜெயித்தார். தனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறார் சீனிவேலின் மகன் செல்வகுமார். இவர் இளைஞரணியின் துணைச் செயலாளராக இருக்கிறார்.
காளிமுத்துவின் மகன்
முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, யூனியன் சேர்மன் முனியாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜ் ஆகியோரும் திருப்பரங்குன்றம் சீட் தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
தளபதிக்கு வாய்ப்பு
தி.மு.க.வில் மீண்டும் சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறனுக்கு சீட் கிடைக்காது என்கின்றனர். இவர் வேறு தொகுதிகாரர் என்பதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் .மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி திருப்பரங்குன்றத்தில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது.
பசையான வேட்பாளர்
பணத்தை தண்ணீராக வாரி இறைத்தால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு உண்டு என்று திமுக, அதிமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தி.மு.க.வுக்கு ஒரு திருமங்கலம் போல அ.தி.மு.க.வுக்கு திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது.