வைகோவுக்கு 8 வருடமாக இல்லாத ஞானம் இப்போது வந்தது ஏன்.. நத்தம் விஸ்வநாதன் கொக்கரிப்பு
கரூர்: தமிழகத்தில் லெட்டர் பேடு கட்சிகள் மக்கள் சக்தி இருப்பதாக கருதி கொண்டு மதுக்கடைகளை எதிர்க்கிறார்கள். மதுக்கடைகளை அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டம் போடுகிறார்கள். 7 -8 வருடமாக கலிங்கப்பட்டியில் மதுக் கடை இருந்தும் திடீரென வைகோவுக்கு ஞானோதயம் வந்தது ஏன் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாடியுள்ளார்.
கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்து செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பாப்பாசுந்திரம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மின்சாரதுறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், கலிங்கப்பட்டியில் 2009 திமுக ஆட்சி முதல் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. ஆனால் புத்தருக்கு போதி மரத்தில் ஞானோதயம் வந்தது போல் ஏழு எட்டு வருடங்களுக்கு பிறகு தற்போது ஞானோதயம் வந்து வைகோ மதுக் கடைகளை அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டம் போடுகிறார்.
வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் லெட்டர் பேடு கட்சிகளாக இருந்து கொண்டு ஒரு வார்டு கவுன்சிலராக முடியாதவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினார்.
நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பேசும் போது இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் ஒரே மாநிலம் "அம்மா" ஆளும் தமிழகம் மட்டுமே. சட்டம் ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை அம்மா கவனித்து கொள்வார்கள் என்றார்.