மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவுடன் தொடர்பு வைத்திருந்தது சசிகலாதான்... நத்தம் விஸ்வநாதன் 'நச்'
மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவுடன் தொடர்பு வைத்திருந்தவர் சசிகலாதான் என நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தம்முடைய மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவுடன் தொடர்பு வைத்திருந்தது சசிகலா நடராஜன் தான் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நத்தம் விஸ்வநாதனும் ஆதரவு தெரிவித்துள்ளார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் சக்திவாய்ந்த அமைச்சர்களாக வலம் வந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், கேபிமுனுசாமி மூவரும் இப்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக கை கோர்த்துள்ளனர்.
சட்டசபையில் திமுக செயல் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்த ஒரே காரணத்துக்காகவே அவர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார் என சசிகலா கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
எங்களுக்கு திமுகவினர் யாருடனும் தொடர்பு கிடையாது. ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காமலேயே மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவினருடன் தொடர்பு வைத்திருந்தவர் சசிகலாதான்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாமதமாக முடிவெடுத்தாலும் சரியான முடிவை எடுத்திருக்கிறார். மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் செல்வாக்கு யாருக்கு என்பதுதான் மிக முக்கியமானது.
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் கூறினார்.