அமைச்சர்களே... அடக்குங்கள் நாவை.... அடேங்கப்பா கலகக் குரல் எழுப்பும் ‘நத்தம்’ விஸ்வநாதன்
தமிழக அமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என ஓபிஎஸ் அணியின் நத்தம் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
திண்டுக்கல்: அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் வெடிக்கத் தொடங்கிவிட்டது. ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் ஓபிஎஸ் தரப்பினருக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் எல்லாம் சரியாகி விடும் என ஈபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.
இரட்டை இலை தொடர்பான தீர்ப்பு எந்த நிமிடத்திலும் வரும் என்பதால் ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு இடம் பிடிக்க இப்போதே துண்டு போடத் தொடங்கிவிட்டது. இதற்காகத்தான் மைத்ரேயன், மனங்கள் இணையவில்லையே என குமுறினார்.
இதற்கு தம்பிதுரை, ஜெயக்குமார் போன்றோர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதனும் அமைச்சர்களுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பேசி வருகின்றனர். அவர்கள் அனைவரும் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
மைத்ரேயன் தெரிவித்திருக்கும் அதிருப்தி கருத்தில் எந்த ஒரு மாற்றுமே இல்லை. எல்லாம் விரைவில் சரியாகும் என கூறினார். ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் ஓரம்கட்டப்பட்டே இருக்கிறார். அவரை தலையெடுக்கவிடாமல் அமைச்சர் சீனிவாசன் கோஷ்டி படுதீவிரமாக இருக்கிறது.
அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடியார் வருகை தந்தபோது விஸ்வநாதன், அவரது ஆதரவாளர்கள் வரவேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.