அது வேற வாயி.. மது விலக்கு இல்லை என்ற நத்தம் விஸ்வநாதன் மதுவுக்கு எதிராக பிரச்சாரம்
திண்டுக்கல்: தமிழகத்தில் மதுவிலக்கு தற்போது சாத்தியமில்லை என சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்திருந்த நிலையில், திண்டுக்கலில் மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார்.
திண்டுக்கலில் இன்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் மதுபானத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
பேரணியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுவிலக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நந்தம் விஸ்வநாதன், மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு வராமல் தமிழகத்தில் சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு, மதுவிலக்குக்கு எதிராக போராடியவர்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நத்தம் இன்று தொடங்கி வைத்தது முரணாக தெரிந்தது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "மக்கள் மனதில் மது குறித்த விழிப்புணர்வு வராதவரை மது ஒழிப்பு சாத்தியமில்லை. அரசு மதுவிற்பனையை நிறுத்தினால், கள்ளச்சாராயம் பெருகிவிடும். எனவேதான் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒரு பக்கம் நடத்துகிறோம்" என்றார்.