இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராம் அதிரடி கைது!
சென்னை: கொளத்தூர் நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகளை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் கொள்ளையடித்து சென்றார். இதில் அவரின், கூட்டாளி தினேஷ் சவுத்ரியும் உடந்தையாக செயல்பட்டார்.
கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை கடந்த நவம்பர் 18ம் தேதி ராஜஸ்தான் சென்றது. தேடுதல் வேட்டையில் நாதுராம், தினேஷ் சவுத்ரியின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரித்தனர்.
கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரியபாண்டியன் தலைமையில், மீண்டும் தனிப்படை ராஜஸ்தான் சென்றது. டிசம்பர் மாதம் 12ம் தேதி இரவு, நாதுராமை செங்கல் சூளை ஒன்றில் வைத்து பிடிக்க முயன்ற போது, இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்தார். உடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியிலிருந்துதான் குண்டு பாய்ந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நாதுராம் தன்னுடைய உறவினர்களுடன் தலைமறைவானார். அதைத்தொடர்ந்து 2வது முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கைது செய்தனர். நாதுராமை பிடிக்க, ராஜஸ்தான் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர்.
இந்த நிலையில், குஜராத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். நாதுராம் ராஜஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுவார். பிறகு அவரை சென்னை போலீசார் சென்னைக்கு அழைத்துவர செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.