கொள்ளை உலகின் கொடூரன் நாதுராம்.. 20 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்
நாடு முழுவதும் 20 மாநிலங்களுக்கு மேல் நாதுராம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னை: கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராமிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் நாதுராம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது
ராஜஸ்தானை சேர்ந்த நகை கொள்ளையன் நாதுராம் பல வருடங்களாக பல மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்திற்கு பின் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் துணையுடன் பிடித்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராமின் கூட்டாளிகளை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை
நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டியனை நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாதுராமை பிடிக்கும் அப்ரேஷனை பாதியில் விட்ட போலீசார் பெரியபாண்டியன் உடலுடன் தமிழகம் திரும்பினர்
பெரியபாண்டியனை சுட்டது யார்?
கொள்ளையன் நாதுராம் காவல் ஆய்வாளரை சுட்டுக்கொன்றது தொடர்பான செய்தி தமிழகத்தில் தீயைப் போல பரவியது. இந்நிலையில் பெரியபாண்டியனை நாதுராம் சுடவில்லை என்று ராஸ்தான் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே தமிழக தனிப்படை குழுவில் உடனிருந்த முனிராஜ் தான் பெரியபாண்டியனை சுட்டது என்று தகவல் பரவியது. இதனை தமிழக காவல்துறையினரும் உறுதி செய்தனர்.
நாதுராமிடம் தீவிர விசாரணை
பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தான் நாதுராமை கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட நாதுராமிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொளத்தூர் நகைக்கடைக்கு அழைத்து செல்லப்பட்ட நாதுராமிடம் கள விசாரணையும் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
நாதுராமுக்கு போலீஸ் காவல்
இந்நிலையில் நாதுராம், தினேஷ் சுவுத்ரி, பக்தாராம் ஆகியோர் தமிழகத்தில் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா, மேலும் வேறு ஏதேனும் குற்ற வழக்கில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் 10 நாள் போலீஸ் காவல் கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு நீதிபதிகள் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
பல மாநிலங்களில் கொள்ளை
இன்று முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளிடம் விசாரணை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள போலீசார், காலை முதல் அவர்களிடம் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாதுராம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொடூரன் நாதுராம்
பல மாநிலங்களில் நாதுராமுக்கு தொடர்பிருப்பது, அதன்மூலமாக கொளத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சென்னை மற்றும் பெங்களூருவில் கொண்டு சென்று விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாதுராமின் நெட்வெர்க் மிக பெரியது என்றும் இளம் வயது முதல் முதியவர்கள் வரை நகைக்கொள்ளைக்கு நாதுராமிற்கு உதவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் இவ்வளவு பெரிய நெட்வெர்க் வைத்திருக்கும் கொள்ளைக்கூட்ட தலைவன் நாதுராம் மட்டும் தான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்
9 நாள் விசாரணை மீதமுள்ளது
ஒருநாள் விசாரணையிலேயே நாதுராம் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், எஞ்சிய 9 நாள் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என்றும், இதுவரை அவன் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளின் உண்மையான மதிப்பு அதன்பின்னரே தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.