தமிழ்நாட்டில் கொள்ளையடித்த பணத்தில் ராஜஸ்தானில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்த திருடன் நாதுராம்
தமிழ்நாட்டில் திட்டமிட்டு திருடிச்சென்ற பணம் நகைகளை வைத்து ராஜஸ்தானில் பங்களா கட்டி ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளான் கொள்ளையன் நாதுராம்.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் கொள்ளையடித்துச்சென்ற பணத்தை சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குக் கொண்டு சென்று ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளான் நாதுராம். அவனது பங்களா, வாழ்க்கை முறை திருடுவதற்கு திட்டம் போடுவது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று தனது நகைக்கடை, அடகுக்கடையை பூட்டிவிட்டு மதியம் சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்து விட்டு வரலாம் என்று வீட்டுக் சென்றார் முகேஷ்குமார். கொளத்தூர் புதிய லட்சுமிபுரம், ரெட்டேரி கடப்பா சாலையில் உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் மகாலட்சுமி ஜூவல்லரி மற்றும் அடகு கடை உள்ளது.
வழக்கம் போல மாலை 4 மணிக்கு கடையை திறந்து பார்த்த போது கடையில் இருந்த 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த முகேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் கடையில் மேல் தளத்தில் ஓட்டை போட்டு கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
நோட்டமிட்டு கொள்ளை
கொள்ளை நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் இரண்டு வட இந்தியர்கள் ஜவுளிக்கடை நடத்த வாடகைக்கு பிடித்தனர். நகை கொள்ளை நடந்த அன்று மேல்தளத்தில் இருந்த கடை பூட்டப்பட்டிருந்தது. நகைக்கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் நகைக்கடையின் மேல் தளத்தில் தங்கி இருந்த 2 பேரும் நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்களின் புகைப்படத்தை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களின் வாழ்க்கை
அப்போது 2 கொள்ளையர்களும் நகைகளுடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த நாதுராம்,28, மற்றும் ஜோத்பூர் மாவட்டம் பிலாரா கிராமத்தை சேர்ந்த தினேஷ் சவுத்திரி,20 என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
நூதன கொள்ளை
கடந்த 2014ம் ஆண்டு சென்னையை அடுத்த மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், நாதுராமிற்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்தே கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் அவனைத் தேடி ராஜஸ்தான் சென்றனர்.
முதலில் உறவினர்களை மட்டுமே கைது செய்ய முடிந்தது. இரண்டாவது முறையாக கடந்த வாரம் சென்ற போது கொள்ளையர்கள் சதிவலையில் சிக்கி உயிரிழந்தார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. இன்ஸ்பெக்டர் முனிசேகர் படுகாயமடைந்தார். மற்ற காவலர்களும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாதுராம் கொள்ளையடிப்பது எப்படி?
நாதுராமும், தினேசும் தமிழகத்திற்கு சென்னை புறநகர் பகுதிகளில் வீடு வாடகைக்கு பிடிப்பார்கள். நோட்டமிட்டு பணம் அதிகம் புரளும் நகைக்கடை, வீடுகளை குறித்து வைத்துக்கொள்வார்கள். மேல்தளத்தில் வாடகைக்கு பிடித்து ஆட்கள் இல்லாத நேரமாக பார்த்து பணத்தையும், நகையையும் கொள்ளையடித்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு தப்பி விடுவார்கள். அங்கே பணத்தை பதுக்கிவிட்டு கொள்ளை வழக்கு பற்றி போலீசும், மக்களும் மறக்கும் வரை தமிழ்நாட்டு பக்கம் வர மாட்டார்கள். ராஜஸ்தானில் பங்களா கட்டியுள்ள நாதுராம், அங்கே மனைவி, காதலியுடன் ஒரு ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளான்.
நாதுராம் எங்கே?
இதனிடையே இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை தொடர்பாக, ராஜஸ்தானில் ஜெய்தாரன் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பெண்கள் உள்பட நாதுராமின் உறவினர்கள் 8 பேரை போலீசார் தேடிவந்தனர். நாதுராமின் கூட்டாளி தினேஷ் சவுத்ரியை ஜோத்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள கடை ஒன்றில் திருட முயற்சித்தபோது, அவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
நாதுராமை கைது செய்வோம்
இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் நாதுராம் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். தினேஷ்சவுத்ரி அதில் சம்பந்தப்படவில்லை என்று ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள சென்னை இணை போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார். நாதுராம் விரைவில் கைது செய்யப்படுவான் என்றும் போலீசார் கூறியுள்ளனர். நாதுராம் கைது செய்யப்பட்டால் கொள்ளை வழக்குகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.