கொள்ளையன் நாதுராமை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி!
ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் நாதுராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் நாதுராமை ஜேத்தாரன் முனிசிப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நாதுராம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை வழக்கு மற்றும் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்தவன் கொள்ளையன் நாதுராம். பெரியபாண்டி இறந்து சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், கடந்த சனிக்கிழமையன்று ராஜஸ்தான் போலசாரால் கைது செய்யப்பட்டான் நாதுராம்.
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று அறிந்தவன் நாதுராம் என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை நாதுராம் எங்கு பதுக்கி வைத்துள்ளான் என்ற விஷயத்திற்கான பதிலும் நாதுராமிடமே உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பபட்ட நாதுராம் ஜேத்தாரன் முனிசிப் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.