ஊழலுக்கு தேசிய விருது கொடுத்தால் முதல் விருது "இவருக்கு"த்தான்.. ஸ்டாலின் நக்கல்!
ஊழலுக்கான தேசிய விருதை முதலமைச்சருக்கு தரவேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி வைத்தால் முதல் விருதை முதலமைச்சர் பழனிசாமிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கி பேசினார். அவர் மட்டுமல்லாது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சற்று அதிகமாகவே ஸ்டாலினை கண்டித்தும், விமர்சித்தும் பேசியிருந்தனர்.
ட்விட்டரில் பதில்
குறிப்பாக முதலமைச்சர் பேசும்போது, "ஸ்டாலின் பேசுவது அனைத்துமே பொய், கிடைத்த நேரத்தில் எல்லாம் நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார், பொய் பேசுவதற்கே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்" என்று காட்டமாக கூறியிருந்தார். முதலமைச்சரின் இந்த பேச்சிற்கு ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் ட்டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
|
பதற்றம் நிறைந்த பேச்சு
"நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் - ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு!"
|
ஊழல் வழக்குகள்
"அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல்விருதை பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இந்த ஆணவப் பேச்சுக்கு, அணி வகுத்து வரும் அவருடைய ஊழல் வழக்குகளே விரைவில் பதில் சொல்லும்." என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
|
ஆளுக்கொரு நீதி
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கும் ஸ்டாலின் தமிழக அரசை கண்டித்து மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, 'ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்' என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் - உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.