மற்றொரு சிக்கலில் கமல்.. பாலியல் வழக்கில் நடிகை பெயரை சொன்னதற்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகையின் பெயரை பகிரங்கமாக கூறியது ஏன் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மலையாள நடிகையின் பெயரை பகிரங்கமாக கூறியது ஏன் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய மகளிர்ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகை மீதாக பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகையின் பெயரை பகிரங்கமாக கூறியதோடு, அவரது பெயரை ஏன் சொல்லக் கூடாது என்றும் வாதாடினார்.
மேலும் திரௌபதி துகில் உறிக்கப்பட்டால் திரௌபதி என்று தானே சொல்ல வேண்டும் ஏன் பெண் என்று சொல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம், நடிகர் கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நடிகையின் பெயரைக் கூறியது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்துவது தவறு, இது கூட நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாதா. எனவே இந்த விவகாரத்தில் அவர் மீது தானாக முன் வந்து வழக்கு பதிந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் கமல் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாவிடில் அவரை நேரடியாக டெல்லிக்கு அழைத்து சம்மன் அனுப்பவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
சட்டப்பிரிவு 828 ஏ படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனிநபரின் விவரங்களையும் வெளியிடக் கூடாது. ஆனால் நேரலையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் நடிகையின் பெயரைக் குறிப்பிட்டதால் சட்டப்படி தவறு என்பதால் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.