கோவை கல்வி அதிகாரிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
கோவை கல்வி அதிகாரிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை: ப்ளஸ் 1 வகுப்பில் இனவாரியான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றாமல் இழுத்தடிப்பு செய்து வந்த கோவை கல்வி அதிகாரிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தூய்மை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, பெண் கல்வித் திட்டம் செயல்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தலித் சேனா மாநில பொது செயலாளர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனுவை கடந்த மாதம் அனுப்பி இருந்தார். மேலும் ப்ளஸ் 1 வகுப்பில் இன்று வரை இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த ஆய்வு கூட்டம் கூட நடத்தவில்லை எனவும் கட்டாய கல்வி சட்டத்தின்படி துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு உரிய ஒதுக்கீடு தருவதில்லை எனவும் அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக பதில் அளிக்க கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய இயக்குனர் மதியழகன் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், கோவை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 20 நாட்களுக்குள் பதில் அளிக்காத பட்சத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.